இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் எப்போது திருமணம் என்பதுதான் கோலிவுட் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருந்தது. அதற்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் கதை சொல்லப் போய் பின்னர் அவரைக் கரம் பிடித்த இயக்குநர் விக்னேஷ் சிவனின் கதை, அவரது படங்களைப் போலவே ரொமான்டிக்கான ஒன்று. க்யூட் தம்பதிகளான இருவரும் முதலில் இணைந்தது ‘நானும் ரவுடிதான்’ படத்தில்தான். அதன் பிறகு தாங்கள் காதலித்து வருவதை வெளியுலகத்திற்கு அறிவித்தனர்.
“இந்தப் படத்திற்கு பிறகுதான் திருமணம்” என்கிற முடிவை இருவரும் சேர்ந்து எடுத்திருப்பதாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ப்ரோமோஷனின் போது விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இருவரும் ஜோடியாக, திருப்பதி உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்குச் சென்று வந்தனர். சமீபத்தில்கூட, விக்னேஷ் சிவனுடன் அவரின் குலதெய்வ கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்தார் நயன்தாரா.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகி வெற்றியும் பெற்றுவிட்ட நிலையில், இப்போது திருமணம் செய்து கொள்ளவிருக்கும் தேதியை எக்ஸ்க்ளூசிவாக விகடனுக்கு அறிவித்திருக்கிறார்கள் மணமக்கள்.
அதன்படி, ஜூன் 9-ல் இவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது. பலரும் எதிர்பார்த்தது போல திருப்பதியில்தான் முதலில் திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்குத் திருப்பதி நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.
வாழ்த்துகள் க்யூட்டிஸ்!