பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!

ஐதராபாத்: பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா வந்த போது ஐதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் மாநில வளர்ச்சி திட்டங்களின் நிலை குறித்த 17 கேள்விகளுடன் வைக்கப்பட்ட பதாகைகள் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவுக்கு பிரதமர் மோடி நேற்று வந்த போது வரவேற்பதை முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் புறக்கணித்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்துக்கு மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது என்?. என்று கேள்விகளை எழுப்பி ஐதராபாத் நகரின் முக்கிய இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. 2016ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெலுங்கானாவுக்கு மருத்துவ பல்கலைக்கழகம் ஒதுக்கப்படாதது குறித்தும் கேள்வி எழுப்பி பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. ராணுவ தளவாட தொழிற்சாலையை தெலுங்கானாவில் அமைக்காதது குறித்தும், ஐதராபாத்தில் இயங்கிய பாரம்பரிய மருத்துவ மையம் குஜராத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்?. என்றும் பதாகைகளில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. காலேஸ்வரம், பாலமுரு – ரங்காரெட்டி திட்டம் ஆகியவை தேசிய திட்டங்களாக அங்கீகரிக்கப்படாதது குறித்தும் பதாகைகளில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. நிஐமாபாத்தில் மஞ்சள் வாரியம் அமைக்காதது ஏன்? தெலுங்கானாவுக்கு நவோதாயா பள்ளிகளை அளிக்காதது குறித்த 17 கேள்விகள் பேனர்களில் இடம்பெற்று இருந்தன. தெலுங்கானாவுக்கு நேற்று வருகை தந்த மோடி பள்ளி நிகழ்ச்சியில் சுமார் 3 மணி நேரம் ஈடுபட்டார். மேலும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.