வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-டில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, 64, எழுதிய, ‘டாம்ப் ஆப் சாண்ட்’ என்ற நாவலுக்கு, ‘புக்கர்’ விருது அறிவிக்கப்பட்ட நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் விருதை பெற்றுக் கொண்டார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும், ‘புக்கர்’ பரிசு வழங்கப்படுகிறது. இந்த புத்தகம், பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியாகி இருக்க வேண்டும் என்பது விதி.இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் 12 நாடுகளின் 11 பிராந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட 13 நாவல்கள், பரிந்துரை பட்டியலுக்கு தேர்வாகின.
இதில், டில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயால், ‘ரெத் சமாதி’ என்ற பெயரில் ஹிந்தியில் எழுதப்பட்டு, எழுத்தாளர் டெய்சி ராக்வெல் என்பவரால், ‘டாம்ப் ஆப் சாண்ட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலுக்கு 2022ம் ஆண்டுக்கான புக்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக, புக்கர் விருதுக்கு தேர்வான முதல் ஹிந்தி மொழிபெயர்ப்பு நாவல் என்ற பெருமையை இந்த நாவல் பெற்றது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு, 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதை மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
Advertisement