பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெலோசிட்டி அணி

புனே,

பெண்களுக்கான 4-வது சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது மற்றும் கடைசி லீக்கில் வெலோசிட்டி- டிரையல் பிளாசர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த வெலோசிட்டி கேப்டன் தீப்தி ஷர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த டிரையல் பிளாசர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (1 ரன்) ஏமாற்றினாலும், சபினெனி மெக்ஹானா (73 ரன், 47 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (66 ரன், 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் அடித்து சவாலான ஸ்கோருக்கு வழிவகுத்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது.

பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெலோ சிட்டியை 158 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே டிரையல் பிளாசர்ஸ் அணிக்கு இறுதிசுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் ஒரு வழியாக போராடி இந்த ஸ்கோரை கடந்த வெலோசிட்டி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 174 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் டிரையல்பிளாசர்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நாவ்கிர் 69 ரன்கள் எடுத்தார்.

சூப்பர்நோவாஸ், வெலோசிட்டி, டிரையல்பிளாசர்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் சூப்பர்நோவாஸ், வெலோசிட்டி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. டிரையல்பிளாசர்ஸ் வெற்றியோடு வெளியேறியது. நாளை இறுதி ஆட்டம் நடக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.