மன அழுத்தம் – நம் சருமத்தை கூட  பாதிக்கும்!

த. வளவன்

இன்றைய நாகரிக உலகில் சுகர், பிரஷர் தவிர வெளியே தெரியாமல் அனைவரையும் உருக்குலைக்கும் ஒரு நோய் தான் மன அழுத்தம்.

தினமும் உடல் ரீதியான நோய்களை தவிர மன அழுத்தத்துக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் 7 லட்சம் பேர் என்கிறது சமீபத்திய புள்ளி விபரம். இதில் சமீபத்தில் மருத்துவர்கள் கண்டுபிடித்திருப்பது உடல் உள்ளுறுப்புகளை மட்டுமல்ல, சருமத்தையும் மன அழுத்தம் பாதிக்கும் என்பது தான் வித்தியாசமான செய்தி. 

சருமம் என்பது நம் உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல.  ஒரு வகையில் அது நம் உடலின் கண்ணாடி என்றே சொல்லலாம். வெளியில் இருக்கும் தூசி போன்றவற்றை நம் உடலுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்வது போலவே, நம் உடலின் உள் பிரச்சனைகளை நமக்கு வெளிக்காட்டும் தன்மையும் சருமத்துக்கு உண்டு.  அந்த வகையில் சருமத்தில் ஏற்படும் பிரச்னைக்கும் மன அழுத்தத்துக்கும் சம்பந்தம் உண்டா? இப்படிக் கேட்டதும், ‘நிச்சயம் உண்டு’ என்கின்றனர்  சரும நோய் மருத்துவர்கள்.

அதிக டென்ஷனில் இருப்பவர்களுக்கு முகப்பரு தோன்றுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக சருமத்தில் அரிப்பு, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. சருமத்தில் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தம் காரணமாக இருக்காது. சில பிரச்சனைகளுக்கு மன அழுத்தமே காரணமாக இருக்கும். உதாரணமாக மஞ்சள் காமாலை இருந்தால் சருமம் நிறம் மஞ்சளாக மாறும். அது போல் பச்சிளம் குழந்தைக்கு இதய நோய் இருந்தால், அதன் கைகள் நீல நிறமாகக் காணப்படும்.  அதே போல மன அழுத்தம் இருந்தாலும், அது சருமத்தில் வெளிப்பட்டு விடும். அந்தக் காலத்தை விட, இப்போது பலருக்கும் மன அழுத்தம் அதிகரித்து இருக்கிறது. காரணம், இப்போதைய கல்வி முறை மற்றும் பணிச்சூழல் தான். எந்நேரமும் அந்த கிளாஸ், இந்த கிளாஸ்  என விளையாடக்கூட நேரம் இல்லாமல் போவதால், இளம் பருவத்தினருக்கும்  ஸ்ட்ரெஸ் அதிகரித்து வருகிறது.

அதற்கு அடுத்து வேலை. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நைட் ஷிஃப்ட் செய்ய வேண்டி வருகிறது. நைட் ஷிஃப்ட் மட்டுமல்லாமல், இரவு, பகல் என வேலை நேரம் மாறி மாறி வருவதால் அவர்களுக்கு மன அழுத்தம் கூடுகிறது. முறையான பழக்கவழக்கங்கள் மாறுபடுவது காரணம். அவர்களால் சரியான நேரத்திற்கு தூங்க முடியாது.

சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியாது. பொதுவாக இரவில் கிடைக்கும் 8 மணி நேரத் தூக்கத்தை, அவர்களால் பகலில் அதே அளவு அனுபவிக்கவே முடியாது. முறையாகச் சாப்பிட முடியாது. பலருக்கு காலை நேர உணவு எடுத்துக் கொள்ளவே நேரமிருக்காது. உடற்பயிற்சி செய்ய நேரம் இருக்காது. இதெல்லாம் ஒரு வகையில் ஸ்ட்ரெஸ் ஏற்பட காரணமாகிவிடுகிறது.  அதிக டென்ஷனில் இருப்பவர்களுக்கு முகப்பரு தோன்றுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக சருமத்தில் அரிப்பு, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. சருமத்தில் அரிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஸ்ட்ரெஸ் காரணமாகவும் அரிப்பு ஏற்படும். சோரியாஸிஸ் போன்ற சரும நோய்கள் பரம்பரைத் தன்மை காரணமாகவோ, வேறு காரணத்தாலோ வந்திருந்தாலும் கூட, மன அழுத்தத்தால் மேலும் மேலும் அதிகரிக்கின்றன.

சிலர் மன அழுத்தம் அதிகரிக்கும் போது சாப்பிடவே மாட்டார்கள். சிலர் அதிகமாகச் சாப்பிடுவார்கள். அதிகமாகச் சாப்பிடுவதன் காரணமாக உடல் குண்டாகிவிடும். பருமன் காரணமாக பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ் ஏற்படலாம். இந்தப் பிரச்சனையின்  எதிரொலியாக முகத்தில் மீசை, தாடி ஆகியவை ஏற்படும். எடை அதிகரிக்கும் போது, சிலருக்கு சருமம் கருமையாக மாறும்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதோ சில டிப்ஸ்.

*படிக்கும் நேரம் தவிர, தினமும் சில மணி நேரங்களாவது பிள்ளைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

*முறையான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

*குறைந்தபட்சம் அரை மணி நேரமென, வாரம் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்தால், உடலின் பல பிரச்சனைகள் சரியாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி மன அழுத்தத்துக்கு சிறந்த மருந்தும் கூட.

*சிறந்த உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். பசிக்கும் நேரத்தில் போண்டா, பஜ்ஜி என சாப்பிடாமல் பழங்கள் சாப்பிடலாம். சாப்பிடுவது கொஞ்சமே என்றாலும், ஆரோக்கியமான உணவுகளை விரும்ப வேண்டும்.

*‘ஸ்ட்ரெஸ் குறைக்கிறேன்’ என்று சிகரெட், ஆல்கஹால் எடுத்துக்கொள்ளக் கூடாது. அது ஆரம்பத்தில் அழுத்தத்தை குறைப்பது போலத் தோன்றினாலும், காலப்போக்கில் ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிக்கவே செய்யும். தீர்வு?சருமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மன அழுத்தம் தான் காரணம் என உடனடியாக முடிவு எடுக்க முடியாது. ரத்தம் மற்றும் பல சோதனைகளுக்குப் பிறகே தெரிந்து கொள்ள முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.