அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை தடுக்கவே தடை விதித்தோம் கோதுமைக்கு தட்டுப்பாடு இல்லை மத்திய வேளாண் மந்திரி விளக்கம்

குவாலியர்,

இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடு இல்லை. அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை தடுக்கவே தடை விதிக்கப்பட்டது என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார்.

கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 14-ந்தேதி இந்தியா தடை விதித்தது. உள்நாட்டில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது.

இதனால், கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக கருதப்பட்டது. இதுகுறித்து மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-

இந்தியாவில் கோதுமைக்கு தட்டுப்பாடு இல்லை. எங்களை பொறுத்தவரை, தேசநலன்தான் முக்கியம். சந்தையில் சமச்சீரான நிலையை பராமரிப்பது அரசின் கடமை. முதலில், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வது அவசியம்.

ஆகவே, கோதுமையை அதிக அளவில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தோம்.

மேலும், உலகத்தில் பெரும்பாலான நாடுகள், உணவுதானிய தேவைக்கு இந்தியாவை எதிர்பார்க்கின்றன. அண்டை நாடுகளும் நம்மை எதிர்பார்க்கின்றன. அண்டை நாடுகளின் தேவையை பூர்த்தி செய்வதும் நமது பொறுப்புதான்.

எனவே, இந்த கடமைகளை நிறைவேற்றுவதற்காக, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.