ஆட்சிகள் தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை! பிரேமலதா விஜயகாந்த்

ஈரோடு: ஆட்சிகள்தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை, ஒன்றியம், திராவிட மாடல் என்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எல்லாமே இங்கு அரசியல்தான். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்தார்.

பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சி வளர்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் தேமுதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அரியலூர் சென்றிருந்தபோது,  சந்திரபாபு நாயுடு `ரேஷன் அரிசி கடத்தலைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று தமிழ்நாடு முதல்வருக்குக் கடிதம் எழுதுகிறார். இதன் மூலம் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று தெளிவாகத் தெரிகிறது என்றும்,  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 37% இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேநிலை, நீடித்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் வரும்” என்று தி.மு.க ஆட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தேமுதிக-வைப் பொறுத்தவரையில் தற்போது யாருடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை. தமிழகம் முழுவதும் எங்களது கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம் என்றவர், பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் கட்சி நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். பாராளுமன்ற தேர்தல் பற்றி நாங்கள் இன்னும் சிந்திக்கவில்லை. இப்போதைக்கு கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம். ஜூன் 2-ந்தேதி தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைத்துள்ளோம். அடுத்தது உட்கட்சி தேர்தல். செயற்குழு பொதுக்குழு வைத்துள்ளோம். இவ்வாறு எங்கள் கட்சி வளர்ச்சி நோக்கியே நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் விவசாயம் மற்றும் நெசவாளர்கள் தான். இதன் மூலம் தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட 6 மாவட்டங்களில் அனைத்து நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. நூல் விலை, பருத்தி விலை உயர்வு காரணமாக இது சம்பந்தப்பட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆலைகள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றியம், திராவிட மாடல் என்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எல்லாமே இங்கு அரசியல்தான். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விசராணைக் கைதிகளை கொல்லும் நிலை உள்ளது. தெருவுக்கு 10 டாஸ்மாக் திறக்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் கொலுசு, பணம் அளித்ததை தவிர வேறென்ன செய்தார் என மக்கள் கேள்வி கேட்க வேண்டும். சாலை வசதி, சாக்கடை வசதி எனும் எதுவும் இங்கு சரியில்லை. மக்கள் தெளிவானால்தான் எல்லாமே இங்கு மாறும்” ஆட்சிகள் தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு ஆட்சியில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும்.

மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார்கள். மத்திய அரசிடம் கேட்டால் இதை மாநில அரசு சரி செய்ய முடியும் என்கிறார்கள். இப்படியே மக்கள் பிரச்சினைகளை மாறி மாறி பழி சுமத்தி தப்பிக்க வழியை தான் பார்க்கிறார்கள். பருத்தி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை செய்ய வேண்டும். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பருத்தியை எல்லாம் அரசாங்கம் வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று உலகத்தில் இந்தியா ஜவுளித்துறையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு 19.4 சதவீதம் ஏற்றுமதியில் உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவை, திருப்பூரை ஒரு காலத்தில் சொன்னார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரி உள்ளது.

ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களின் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பவராக இருக்க வேண்டும். பருத்தி நூல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆலைகளை திறக்க வேண்டும். அதை நம்பி வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

அம்மா உணவகம் திட்டத்தை தமிழ்நாடு மக்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர். அந்தத் திட்டத்தை தொடர வேண்டும். இன்று கலைஞருக்கு சிலை திறப்பு விழா வைத்திருக்கிறார்கள் இதை வரவேற்கிறோம். எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற காரணத்தில் நிறைய இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியது. இதன் காரணமாக தான் இன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் மாட்டி திணறி வருகிறது.

விஜயகாந்த் முதலில் கட்சி ஆரம்பித்தபோது லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்றார். அன்று எல்லோரும் கேலி பேசினார்கள். இன்று இந்தியா முழுவதும் என்ன நடக்கிறது. அந்த லஞ்சம் ஊழலை ஒழிப்பது தான் எங்கள் முதல் நோக்கம் என்று எல்லா தலைவர்களும் பேசி வருகிறார்கள்.

ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று முதலில் கூறியவர் விஜயகாந்த்தான். அன்று எல்லோரும் கேலி பேசினார்கள். இன்று எல்லாம் மாநிலங்களில் எடுத்துக்கொண்டாலும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.