“கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கைய நாயுடு தான்” – முதல்வர் ஸ்டாலின் உரை

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த மாதம் சட்டப்பேரவையில், “தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவரும் தி.மு.க முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை நிறுவப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி சுமார் 1.7 கோடி ரூபாய் மதிப்பில் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச்சிலை 12 அடி உயர பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

கலைஞர் சிலை

அந்த சிலையின் கீழ் 5 கட்டளைகள் எழுதப்பட்டுள்ளது. “வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்ற கட்டளைகள் எழுதப்பட்டுள்ளது.

சிலை சிறப்பை தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து , நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்களும், எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும், எம்.பி-க்களும் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் வரவேற்று பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒருபக்கம் இது மகிழ்ச்சியான நாள். மறுபக்கம் அந்த சிலையை பார்த்தப்போது நெஞ்சம் உருகி விட்டது. நம்மிடம் கலைஞர் பேசுவது போல் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளை தொடர்ந்து கலைஞர் சிலை அமைந்துள்ளது. கலைஞர் சிலை எங்கே ஏன் இருக்க வேண்டும் என சிந்தித்து முடிவு எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவை நடக்கும் இடமாக ஒரு மகத்தான கட்டடத்தை எழுப்பியவர் கலைஞர் கருணாநிதி. ஆனால் கடைசி நேரத்தில் அது கை கூடாமல் போய் விட்டது.

முடியாததை முடித்துக் காட்டுவதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். அதே போல் ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின் தான். கலைஞர் கைது செய்யப்பட்ட போது அறிவாலயத்துக்கு வந்தவர் வெங்கைய நாயுடு . டெல்லியில் எங்களைப்போல் வேட்டி கட்டும் வெங்கைய நாயுடுவும் எங்கள் ஊர்க்காரர் தான். அவர் இன்று கலைஞரின் சிலையை திறந்து வைத்ததில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார்.

விழாவில் தலைமை உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று தன் உரையைத் தொடங்கினார். “வாழ்வில் ஒரு பொன் நாள் என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாள் இந்நாள். தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையில் கலைஞர் சிலை அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானது. சட்டப்பேரவையாக கலைஞர் உருவாக்கியதுதான் இந்த வளாகம்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு நட்புக்குரிய இனிய நண்பராக இருந்து வருகிறார். கலைஞர் கைது செய்யப்பட்ட போது அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தவர் வெங்கைய நாயுடு. கலைஞர் சிலையை யாரை வைத்து திறக்கலாம் என்று ஆலோசித்த போது மனதில் முதலில் தோன்றியவர் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தான். கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கைய நாயுடு.

இலக்கியம் திரைப்படம் என கால் பதித்த அத்தனை துறைகளிலும் சாதித்தவர் கருணாநிதி. இன்று காணக் கூடிய நவீன தமிழ்நாடு கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திமுகவை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.