ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தொலைக்காட்சி நடிகையைக் கொன்ற 2 தீவிரவாதிகள் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, புல்வாமா மாவட்டம் அவந்தி போரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஷாகித் முஷ்டாக் பட், பர்ஹான் ஹபீப் ஆகிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் கடந்த புதன்கிழமை பட்காம் மாவட்டத்தில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் என்பவரை கொன்றவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி லத்தீப் என்பவரின் உத்தரவுப்படி இந்தத் தீவிரவாதிகள் நடிகை அம்ரீனை சுட்டுக் கொன்றதாகவும், அவரது கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்ரீநகரில் சவுரா பகுதியில் நடந்த மற் றொரு மோதலில் லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 நாட்களில் லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் என 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய்குமார் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.