கொழும்பு கோட்டை நீதவான் ,காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது விதித்துள்ள தடை

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு இன்றுடன் 50 தினங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணி, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் சில வீதிகளில் பயணிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று (27) முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கொழும்பு என்.ஏ.எஸ். சுற்றுவட்டத்தில் இருந்து சைத்திய வீதி வரையான பகுதி, என்.ஏ.எஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ஜனாதிபதி மாவத்தை வரை, செரமிக் சந்தியிலிருந்து யோக் வீதி வரையான வீதி, அத்துடன் யோக் வீதியிலிருந்து பெஸ்ரியன் மாவத்தை வரையான பகுதிகளில்; பேரணி பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

முதலிகே மாவத்தை, ரோயல்ஸ் வீதி, வங்கி மாவத்தை, ஜயதிலக்க மாவத்தை, சத்தம் ஸ்ரீட் ஆகிய வீதிகளில் பேரணி பயணிப்பதற்கும், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும்; தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு 50 தினங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொள்ளுப்பிட்டியில் இருந்து காலிமுகத்திடல் வரை இன்று பாரிய பாத யாத்திரையை நடத்தவிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.