சர்வதேச நிதியத்தின் நிபந்தனையால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 'கிடுகிடு' உயர்வு லிட்டருக்கு தலா ரூ.30 அதிகரிப்பு

இ்ஸ்லாமாபாத்,

பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், ஆத்திரம் அடைந்த சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது.

அந்த கடனை விடுவிக்கவும், கூடுதலாக 200 கோடி டாலர் கடன் வழங்கவும் கோரி கடந்த ஒரு வாரமாக சர்வதேச நிதியத்துடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்ைத நடத்தியது. பெட்ரோல், டீசல் மீதான மானியத்தை நீக்கி, விலையை உயர்த்துமாறு சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது.இதனால், முடிவு எட்டப்படாமல், நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை முடிந்தது.

இந்தநிலையில், நேற்று பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. லிட்டருக்கு தலா ரூ.30 வீதம் இரு பொருட்களும் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி மிப்டா இஸ்மாயில் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.