மனைவியின் காலை முறித்து கழுத்தை அறுத்த ஐ.டி.ஊழியர்..! கொடூர கொலை பின்னணி

தாம்பரம் அடுத்த  பொழிச்சலூரில் மனைவி, இரு குழந்தைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்து விட்டு ஐ.டி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக் கருவியை அமேசானில் ஆர்டர் செய்து குடும்பத்தையே நிர்மூலமாக்கிய விபரீத கொலையாளி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ், 41வயதான இவர் டி.சி.எஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் மாதம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்து வந்தார். இவருக்கு காயத்திரி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மனைவி காயத்திரி கால் முறிவு ஏற்பட்டு சகோதரர் வீட்டில் தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று மனைவி காயத்திரியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் பிரகாஷ். அதன் பின்னர் தனது சகோதரியை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரிடம் இருந்து பதில் ஏதும் வராத நிலையில் மற்றொரு வீட்டில் வசிக்கும் பிரகாஷின் தந்தையை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் அங்கு சென்று பார்த்த போது கதவு திறந்து கிடந்திருக்கின்றது.

வீட்டினுள் சென்று பார்த்தால் அறை முழுவதும் ரத்த சகதியாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து உடனடியாக சங்கர் நகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டு சுவற்றில் ரத்த துளிகள் சிதறி இருந்தது.

மரம் அறுக்க உபயோகப்படுத்தும் ரம்பத்தால் காயத்திரி, அவரது இரு குழந்தைகளும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு சடலமாக கிடந்தனர். அருகில் பிரகாசும் மர அறுவை எந்திரத்துடன் ரத்தம் சொட்ட சடலமாக கிடந்தார்.

ஏற்கனவே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த காயத்திரிக்கு மற்றொரு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. வீட்டின் சுவற்றில் கடன் தொல்லையால் தாங்கள் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி ஒட்டப்படிருந்தது.

விசாரணையை முன்னெடுத்த போலீசார், மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி, குழந்தைகளை கொலை செய்த பிரகாஷ், பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஐ.டி ஊழியர் வீட்டில் மரம் அறுக்கும் எந்திரம் எப்படி வந்தது ? என்று விசாரித்த போது, கடந்த 19 ந்தேதி அமேசானில் ஆர்டர் செய்து இந்த ரம்பத்தை பிரகாஷ் வாங்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாதம் ஒன்றே கால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்த ஐ.டி.ஊழியர் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ? கதவை திறந்து போட்டு தற்கொலை செய்து கொள்வார்களா ?

கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி குடும்பமே சேர்ந்து எடுத்த முடிவு என்றால் வேறு விதமாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாமே..? மரம் அறுக்கும் கருவியால் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலை செய்தது எதனால் ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

அவரது வீட்டில் மூன்றரை லட்சம் ரூபாய்க்கு பிரகாஷ் பெயரில் கடன் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவர் யார்? யாருக்கு ? என்ன காரணத்திற்காக கடன் கொடுக்க வேண்டி இருந்தது என்பன போன்ற எந்த விவரமும் தெரியவில்லை.

முதற்கட்ட புலன் விசாரணையில் இரவு 11 மணிக்கு மேல் சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்றும்
மனைவி குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அதன் பின்னர் பிரகாஷ், 3 பேரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்வதற்கு முன்பாக ஏற்கனவே காலில் முறிவு ஏற்பட்ட மனைவியின் மற்றொரு கால் முறிக்கப்பட்டு உள்ளதால், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான விரக்தியால் திட்டமிட்டு மேற்கொண்ட விபரீத செயலாக இருக்குமோ ?என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்

தடயவியல் நிபுணர்களில் முழுமையான சோதனைக்கு பின்னர் , 4 பேரது சடலங்களையும் பிணக்கூறாய்வுக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறுகையில், கொலையாளி பிரகாஷ் வினோத மன நிலை கொண்டவராக இருக்கலாம், அதனால் கொலைக்கு மரம் அறுக்கும் ரம்பத்தை பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவித்தார். சுவரில் ஒட்டி உள்ள கடிதத்தில் ஒன்றாக சேர்ந்து முடிவெடுத்தாகவும் யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய காவல் ஆணையர் ரவி, பிரகாஷின் செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தி கடன் தொல்லை, அல்லது வேறு ஏதாவது மிரட்டல் விவகாரம் பின்னணியில் இருக்கிறதா ? என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.