மாணவர்களுக்கு புதிய உத்தரவு – கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை என, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட, அதற்கு எதிராக, ஹிந்து அமைப்புகளும் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த உடைகளை அணிய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மாநிலத்தில் தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஹிஜாப் அணிந்து வருவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டும், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை. அதனால் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு ஹிஜாப் அணிந்து வந்தால், அந்த மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கோர்ட்டு தீர்ப்பை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். சட்டத்திற்கு மதிப்பளிக்க வேணடும். ஹிஜாப்பை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இதனை ஹிஜாப் என்று மட்டும் பார்க்கவில்லை. ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் கும்பல்கள் பற்றியும் அறிய வேண்டும். ஹிஜாப் அணிய தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் ஹிஜாப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசி வருகிறார். சட்டசபையில் வைத்தும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பேசுகிறது. காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிஜாப்பை ஆதரித்து பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.