மே 31ல் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை அடுத்து, இது தொடர்பாக, வரும் 31 ஆம் தேதி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

நரேந்திர மோடி, முதன் முதலில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்த அவர், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று, நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் 30 ஆம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சல பிரதேச மாநிலத்திற்குச் செல்கிறார். அவர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இருந்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி காட்சி வழியே உரையாட உள்ளார். இதற்காக இமாச்சல பிரதேச முதலமைச்சர்
ஜெய்ராம் தாக்குர்
இன்று ரிட்ஜ் மைதானத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

இது தொடர்பாக, இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பிரதமரின் 8 ஆண்டு கால ஆட்சி மிக நல்ல முறையில் நடந்துள்ளது. மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவை முன்னிட்டு மாநிலத்திற்கு பிரதமர் வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக இமாச்சல பிரதேச மக்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே உரையாட இருக்கிறார். பாஜகவின் அனைத்து மாவட்ட தலைமையகத்துடனும் அவர் தொடர்பு கொண்டு பேசுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.