வேட்டைக்கு போன சாமி கிணற்றில் சடலமானதால் கோவில் கொடை விழா நின்றது..!

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல் புரம்  அருகே கருப்பசாமி கோவில் கொடை விழாவில் வேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டுச்சென்ற சாமியாடி மாயமான நிலையில் கிணற்றில் தவறி விழுந்து பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அடுத்த எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோவிலில் லாரிவைத்து தொழில் செய்து வரும் சென்னையை சேர்ந்த 55 வயதான முருகன் என்பவர் எட்டு நாட்கள் விரதம் இருந்து கருப்பசாமிக்கு ஆடினார்

26 ந்தேதி அன்று இரவு 1.30 மணி அளவில் சாமக்கொடையில் ஆவேசமாக சாமியாடிய முருகன் , ஒரு கையில் வேல் கம்பு, மறுகையில் தீப்பந்தம் ஏந்தி வேட்டைக்கு சென்றார்.

கோவிலில் ஒற்றை கொட்டு முழங்க எல்லை நாயக்கன் பட்டியில் இருந்து தெய்வசெயல் சுற்றி அரை மணி நேரத்தில் கோவிலுக்கு திரும்பும் சாமியாடி… 2 மணி நேரத்திற்கு மேலாகியும் திரும்பி வரவில்லை மாயமானார்.

இதனால் சென்னையில் இருந்து கோவில் கொடை விழாவிற்க்கு வந்திருந்த சாமியாடி முருகனின் மனைவி மகள்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஊரும் பதறி போனது. 300 க்கும் மேற்பட்டவர்கள் கையில் டார்ச்லைட்டு மற்றும் செல்போன் லைட்டுடன் சாமிவேட்டைக்கு சென்ற பாதையில் தேடத்தொடங்கினர்.

வழியில் வயல்காட்டுபகுதியில் உள்ள தரைமட்டகிணற்று நீரில் சாமியாடிக்கு அணிவித்த மாலைகள் மிதந்தன. இதையடுத்து உள்ளூர் இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து பார்த்த போது நீருக்கு அடியில் சாமியாடி முருகன் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்ட இளைஞர்கள் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினரின் விசாரணையில் வேட்டைக்கு சென்ற சாமியாடி முருகன் வயல்காட்டில் இருந்த தரைமட்ட கிணற்றை கவனிக்காமல் உள்ளே தவறி விழுந்தது தெரியவந்தது. இதனால் கருப்பசாமி கோவில் கொடை விழா பாதியிலேயே நின்று போனதோடு ஊரே சோகத்தில் மூழ்கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.