நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்றுவிட்டு எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் பதுங்கி இருந்த நபர்

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் கொரஹன் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரை சேர்ந்தவர் அன்சர் அலி ஹசிசட் அலி (வயது 29) . இவரது மனைவி ரோஷி ஹதுன்.

தம்பதி கடந்த புதன்கிழமை கொரஹன் பகுதியில் உள்ள புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளனர். அதேவேளை, கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தை மீது அன்சருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக தம்பதியர் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை அதிகாலை கணவன் – மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அன்சர் தனது மனைவி ஹதுனை அடித்துக்கொலை செய்துள்ளார்.

பின்னர், மனைவியை கொலை செய்தது குறித்து மனைவியின் சகோதரிக்கு போனில் தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து உடனடியாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி போலீசில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து தொழில்நுட்ப உதவி மற்றும் சிசிடிவி கேமரா உதவியுடன் கொலையால் அன்சர் மும்பையில் இருந்து உத்தரபிரதேசம் செல்லும் ஷப்ரா-ஹொடன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த ரெயிலை பின் தொடந்த போலீசார் உத்தரபிரதேசத்தில் பிரயங்ராஜ் நகரில் ரெயிலை பிடித்தனர். நிலையத்தில் ரெயில் நின்ற நிலையில் அங்கு வந்த மும்பை போலீசார் உள்ளூர் போலீசாருடன் ரெயிலில் சோதனை நடத்தினர்.

அப்போது, ரெயின் கழிவறையில் மறைந்திருந்த அன்சரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்சர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.