பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ், இன்று சென்னை தி நகரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், முன்னாள் தலைவர் ஜிகே மணி, ஏகே மூர்த்தி உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கட்சியின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது,
“தலைவராக பொறுப்பேற்றதை முன்னிட்டு மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்துள்ளேன். அதன்படி இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்தேன் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இளைஞர் அணி தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போதைக்கு முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனைகளை நேரில் கேட்டறிய உள்ளேன். அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். மேலும் சமூக பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.
முக்கியமாக தமிழகத்தில் கிடப்பில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக குரல் கொடுக்க உள்ளேன்” என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.