முன்கூட்டியே தொடங்கிய பருவமழை – ஜூன் 1 வரை கனமழை எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், வரும் 1 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே, அதாவது, மே மாதம் 23 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, மே மாதம் 30 ஆம் தேதிக்கு முன்பு தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் 3 நாட்கள் முன்னதாக இன்று கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனையொட்டி நாளை (30 ஆம் தேதி ) திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய பகுதிகளில்ம், நாளை மறுநாள் (மே 31) பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளிலும், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளில் ஜூன் மாதம் 1 ஆம் தேதியும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் , 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இடி, மின்னல்களின் போது மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. கனமழை மற்றும் அதிக காற்று வீசும் என்பதால், மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.