மே 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களுடன் ஆலோசனை – காணொலி மூலமாக கலந்துரையாடுகிறார்

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைநகரம் சிம்லாவில் இருந்து, அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலி மூலமாக கலந்துரையாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வரும் 30-ம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் நற்பணிகள், நலத் திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகள், ஏழைகள் மற்றும் தலித் பிரிவினரின் வாழ்க்கையை மேம்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் திரையரங்குகளில் மத்திய அரசின் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தவும் பாஜக மூத்த தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், `தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 8 ஆண்டு சேவை நல்லாட்சி மற்றும் ஏழை நலன்’ என்ற தலைப்பில் வரும் 30-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை பிரச்சாரத்தை தொடங்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசத்துக்கு வரும் 31-ம் தேதி வரவுள்ளார். அவர் மாநிலத் தலைநகர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இருந்து, அனைத்து முதல்வர்களுடனும் காணொலி மூலம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் நேற்று சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்துக்கு நேரில் சென்று, பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடி வருவது பெருமைக்குரியது. இதனால் இமாச்சலப் பிரதேச மக்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி காணொலி வழியே உரையாடுகிறார். பின்னர், பாஜகவின் அனைத்து மாவட்ட தலைமையகத்துடனும் பேசுவார்.

சர்வதேச அங்கீகாரம்

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் அங்கீகாரம் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 8 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட பிரதமர் மோடி, சிறிய மாநிலமான இங்கு வருவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கு வருமாறு நாங்கள் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அதை ஏற்று இங்கு அவர் வருகிறார்.

சிம்லா நகரின் சாலைகள் மிகவும் குறுகியவை. எனவே, ரிட்ஜ் மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கு மட்டும் ஏற்பாடு செய்துள்ளோம். அங்கிருந்தபடியே மாநில மக்களுடன் அவர் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.