சென்னை: வங்கியின் சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது 100 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக தவறுதலாக குறுஞ்செய்தி சென்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தவறுதலாக குறுஞ்செய்தி சென்றதே தவிர அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் செல்லவில்லை என்று ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை தியாகராயநகரில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கிக் கிளையில் இருந்து நூறு வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு தலா ரூ.13 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது. தியாகராயநகர், பர்க்கிட் சாலையில் உள்ள வங்கிக் கிளையில் இருந்து 100 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூ.13 கோடி அனுப்பப்பட்டுள்ளது.
இதனை அறிந்த வங்கியின் ஊழியர்கள், பணம் அனுப்பப்பட்ட 100 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை முடக்கினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணாமாக இந்த தவறு நடந்ததா என்பது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
வங்கித் தரப்பில் விளக்கம்: வங்கியின் சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது 100 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக தவறுதலாக குறுஞ்செய்தி சென்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தவறுதலாக குறுஞ்செய்தி சென்றதே தவிர அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் செல்லவில்லை.
மேலும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வைத்திருந்த பணத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் தேவையின்றி குழப்பம் அடைய வேண்டாம் என்று ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.