கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்க ஏற்பாடு : பிரதமர் மோடி

டெல்லி : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் துணை நிற்கிறார்கள். நான் குழந்தைகளுடன் பிரதமராக அல்ல. குடும்ப உறுப்பினராக பேசுகிறேன். அவர்கள் இடையே நான் நிம்மதியாக இருக்கிறேன்.மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவது சிறு ஆறுதலைத் தரும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து உதவ வேண்டும்.பெற்றோர் வழங்கிய அன்பையும், பராமரிப்பையும் யாராலும் ஈடு செய்து விட முடியாது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் தொழிற்கல்வி, உயர்கல்விக்கு கடன் தேவைப்பட்டால் பிஎம் கேர்ஸ் உதவும். குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் கிடைக்குமாறு இதர திட்டங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் உதவிபெறும் குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடிக்கும் போது, எதிர்கால கல்விக்கு அதிக பணம் தேவைப்படும்.  இதற்காக 18-23 வயது வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் வழங்கப்படும். பிம் கேர்ஸின் பாஸ்புக் மற்றும் சுகாதார அட்டை ஆகியவையும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. சுகாதார அட்டையின் மூலம் ரூ.5 லட்சம் வரை மாணவர்கள் மருத்துவ வசதி பெற முடியும். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இந்தியத் தாய் துணை நிற்கும்,’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.