நேபாளத்தில் 22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர் இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ளனர். விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்படவுள்ளன. அதில் இந்தியர்களின் சடலங்கள் இருக்கின்றனவா என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து செய்தி தொடர்பாளர் தியோ சந்திர லால் கார்ன், ” விபத்து நடந்த பகுதியில் இருந்து இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து பகுதிக்கு கூடுதலாக மீட்புப் படையினர் அழைத்துச் செல்ல முடியாத அளவிற்கு அங்கு மோசமான வானிலை நிலவுகிறது” என்று கூறினார்.
Crash site: Sanosware, Thasang-2, Mustang pic.twitter.com/OcN93N1Qyb
— NASpokesperson (@NaSpokesperson) May 30, 2022
முன்னதாக நேற்று, தாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET சிறிய விமானம், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக்ராவிலிருந்து வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. நான்கு இந்தியர்கள், சில ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேபாள நாட்டின் விமானம் சென்றது. சிறிது நேரத்தில் விமானம் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தலகிரி என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
14 சடலங்கள் மீட்பு: இந்நிலையில் இன்று காலை விபத்து பகுதியை மீட்புக்குழு கண்டறிந்தது. சோனஸ்வரே மலையில் தசாங் 2 எனுமிடத்தில் நொறுங்கிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை விபத்துப் பகுதியிலிருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியர்களின் சடலம் இருக்கிறதா என அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.