புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் தியாகச் சுவர்: ஜூலையில் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியது: ”நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் 75 நகரங்களில் சக்ரா பவுண்டேஷன் அமைக்கவுள்ளது. புதுவை கடற்கரை காந்தி சிலை காந்தி சிலை பகுதியில் தியாகச் சுவருடன், கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயரை தியாக சுவரில் பொறித்து அதில் ‘கியூ ஆர் கோடு’ அமைக்கப்படும். இதன்மூலம் தியாகிகளின் வரலாறை தெரிந்துகொள்ளலாம்.

ஜூலை முதல் வாரத்தில் தியாகச் சுவர், கொடிக் கம்பம், தியாகச் சுவர் திறப்பு விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் தேசியக் கொடியை ஏற்றி தியாக சுவரை பிரதமர் திறந்து வைப்பார். நிகழ்ச்சியோடு பாரதியார் 100-வது ஆண்டு, சுபாஷ் சந்திரபோசின் 125-ம் ஆண்டு, வஉசி 150-வது ஆண்டு விழாக்களையும் இணைந்து கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

பேட்டியின்போது பேரவைத்தலைவர் செல்வம், சக்ரா பவுண்டேஷன் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.