பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 'பி.எம்.கேர்ஸ்' திட்ட பலன்களை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி : குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் மோடி அளிப்பார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும்.மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 28, 2022 வரை கோவிட் பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் மே 29, 2021 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும்  உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைகளை பதிவு செய்வதற்காக http://pmcaresforchildren.in/ என்ற தளம் தொடங்கப்பட்டது.  ஒப்புதல் நடைமுறைகளுடன் குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளை வழங்கும் ஒற்றை சாளர அமைப்புமுறையாக இந்தத் தளம் செயல்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.