“மூன்று வேளையும் மேகி மட்டுமே சமைக்கிறார்..!" – மனைவியை விவாகரத்துசெய்த கணவர்

எத்தனையோ காரணங்களுக்காக விவாகரத்து செய்யப்படுவதை கேள்விப்பட்டிருப்போம். சில நேரங்களில் சிறிய பிரச்னைக்குக்கூட விவாகரத்து செய்துவிடுவதுண்டு. ஆனால், கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு எந்நேரமும், அதாவது 3 நேரமும் மேகி நூடுல்ஸ் சமைத்து போட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூரு அருகில் உள்ள பெல்லாரியில் வசிப்பவர் ராஜாராம்(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணமான நாளிலிருந்து ராஜாராமுக்கு அவர் மனைவி மேகி நூடுல்ஸ் வாங்கி சமைத்து கொடுத்து வந்திருக்கிறார். சமையல் கற்றுக்கொண்டு விரைவில் வேறு உணவுகளை சமைப்பார் என்று ராஜாராம் எதிர்பார்த்தார். ஆனால் காலை, மாலை, இரவு என மூன்று நேரமும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் தன் மனைவிக்கு நூடுல்ஸை தவிர வேறு எதுவும் சமைக்கத் தெரியாது என்பதை அறிந்துகொண்ட ராஜாராம், மனம் நொந்து மைசூரு குடும்ப நல நீதிமன்றத்தில் தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார். இதில் இருவரும் மனமொத்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து கோருவதாக தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகுநாத், இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

விவாகரத்து

மேலும், இந்த வழக்கை `மேகி வழக்கு’ என்று குறிப்பிட்ட நீதிபதி ரகுநாத், “கணவர் தன் மனைவி தினமும் 3 வேளையும் ரெடிமேடு நூடுல்ஸ் மட்டுமே சமைப்பதாக தெரிவித்திருக்கிறார். கடைக்குச் சென்று ரெடிமேடு நூடுல்ஸ் மட்டுமே வாங்கி வருவதாக தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். விவாகரத்து வழக்குகள் கோர்ட்டுக்கு புதிதல்ல. சாப்பாட்டு தட்டில் தவறான இடத்தில் உப்பு வைத்ததற்காக திருமணமான ஒரே நாளில்கூட சிலர் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். விவாகரத்துகள் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. திருமணமாகி ஒரு ஆண்டாவது சேர்ந்து வாழவேண்டும். அதற்கு சட்டம் இல்லாத பட்சத்தில் திருமண ஹாலிலிருந்து நேராக விவாகரத்து கேட்டுவரும் நிலை உருவாகும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.