கார்த்திக் கோபிநாத் என்பவர் கடவுளின் பெயரை கூறி, வசூலில் ஈடுபட்டு மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. யூடியூப் சேனல் நடத்தி வரும் கார்த்தி கோபிநாத் சிறுவாச்சூர் கோயிலை மாற்று மதத்தினர் இடித்து விட்டதாக புகார் கூறி, வசூலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதை காரணமாக வைத்து இணையதளம் வழியாக ரூ.50 லட்சம் வசூலித்து மோசடி செய்துள்ளார் என்பது குற்றசாட்டு. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸார் இவரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் ரூ.50 லட்சத்துக்கு மேல் வசூலித்ததாகவும், அதன் பிறகு இவர் அங்கு எந்த புனரமைப்பு பணியும் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
கார்த்திக் கோபிநாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது அவரை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், “ திமுகவினர் கார்த்திக் கோபிநாத் மீது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது கண்டனத்திற்குரியது. தேசியவாதியான கார்த்திக் கோபிநாத்துக்கு தமிழக பா.ஜ.க துணை நிற்கும். அவரின் அப்பாவிடம் அவருக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்” பதிவிட்டுள்ளார்.