அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் வயிற்றில் மர்மப் பொருள் இருப்பதாக புகார்

காட்டுமன்னார்கோவில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் வயிற்றில் மர்ம பொருள் வைத்து தைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (36). இவருக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்ற நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு தொடர்பாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
image
இந்நிலையில், கர்ப்பப்பையில் நீர்கட்டி இருப்பதாகவும் அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர் செந்தில் குமார் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சில நாட்களுக்கு பின் கலைச்செல்விக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றபோது மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கலைச்செல்வி அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரின் வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்த வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படும் பொருள் ஒன்று இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி தனக்கு அறுவை சிகிச்சை செய்த காட்டுமன்னார்கோவில் தனியார் மருத்துவமனையில் முறையிட்டுள்ளார்.
image
அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தனியார் மருந்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உறவினர்களுடன் காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் கலைச்செல்வி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுள்ளனர்..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.