காவலில் இருந்து தப்பிய கைதி; வாகனம் மோதி பரிதாப பலி| Dinamalar

கவுகாத்தி : அசாமில், போலீஸ் காவலில் இருந்து தப்பிய கைதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.வடகிழக்கு மாநிலமான அசாமின் நகோவான் மாவட்ட போலீசார் சமீபத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக மீன் வியாபாரி சபிகுல் இஸ்லாம் என்பவரை கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் அவர் மரணம் அடைந்தார்.

அவரை போலீஸ் அடித்துக் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி, போலீஸ் ஸ்டேஷனை தீ வைத்துக் எரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அஷிகுல் இஸ்லாம் என்பவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அஷிகுல் வீட்டில் நடத்திய சோதனையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், போலீஸ் காவலில் இருந்த அஷிகுல் நேற்று காலையில், போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினார். அப்போது வாகனம் ஒன்றின் மீது மோதி பலத்த காயம் அடைந்தார். போலீசார் அவரை நகோவான் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அஷிகுல் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். காயம் அடைந்த சப் – இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீசார் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.