பிறந்த நாளை இறந்த நாளாக்கிய குடிகார கூட்டாளீஸ்..!

பிறந்தநாளை கொண்டாடும் விதமாக  நண்பர்களுக்கு மது விருந்து அளித்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அலமாதி ஏரிக்குள் அரங்கேறி இருக்கின்றது. பிறந்த நாளை இறந்த நாளாக்கிய ஓசிக்குடி கூட்டாளிகள் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. 21 வயதான இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்தார். தனது பிறந்தநாளையொட்டி மாரிமுத்து தனது நண்பர்களுக்கு அலமாதி ஏரிக்குள் மதுவிருந்து வைத்தார்.

மாரிமுத்து தமது நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பின்னர் மது அருந்தியுள்ளார். அப்போது திடீரென நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ராமமூர்த்தி பர்த்டே பேபி மாரிமுத்துவை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தியும், லோகேஸ்வரனும் சேர்ந்து மாரிமுத்துவை தூக்கிக் கொண்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் மாரிமுத்துவின் நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய பர்த்டே பேபி மாரிமுத்து பிறந்தாளிலேயே மரித்துப்போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிகாரன் சவகாசம் குல நாசம் என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு உதாரணம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.