மதுரை: 2 நாட்களாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

மதுரை மாநகராட்சியில் 2 நாட்களாக நடைபெற்று வந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் அடிப்படையில் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், 2006ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 3,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
image
இதனால் மாநகராட்சியில் அகற்றப்பட வேண்டிய 1500 டன் குப்பைகள் தேக்கமடைந்து பிரதான சாலைகள் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் இன்று நடைபெற்ற 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
image
மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், மக்களின் நலன் கருதி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் பணியாளர்கள் பணிக்குச் செல்வார்கள் எனவும், ஒவ்வொரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஒவ்வொரு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.