அயோத்தி ராமர் கோவில் கருவறை கட்டுமானம் துவங்கியது!

அயோத்தி :உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையும் ராமர் கோவிலுக்கான கருவறை கட்டுமானப் பணிகள் நேற்று முறைப்படி துவங்கின. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து, இந்தப் பணிகளை துவக்கி வைத்தார்.

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், கோவிலை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, ஹிந்து கடவுள் ராமருக்கான கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 2020 ஆகஸ்டில் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதையடுத்து, முதல்கட்டமாக அடித்தளம் அமைக்கும் பணி துவங்கியது.

மற்றொரு வெற்றி

திட்டமிட்டபடி இந்தப் பணி முடிந்ததை தொடர்ந்து, கருவறை உட்பட கோவில் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டு, இந்தப் பணி துவக்கி வைக்கப்பட்டது. இதில், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, அயோத்தி முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
பூஜைகளுக்குப் பின், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:இது, இந்தியா மீது படையெடுத்தவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள மற்றொரு வெற்றியாகும். இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தரக்கூடிய நாளாகும். இந்தக் கோவில், மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும். இது, தேசியக் கோவிலாக விளங்கும். கடந்த 500 ஆண்டுகளாக பக்தர்களின் மன வேதனைகள் முடிவுக்கு வர உள்ளன.முகலாயர்கள் படையெடுப்பால், இந்திய மக்களின் நம்பிக்கைகள் சேதப்படுத்தப்பட்டன; தரைமட்டமாக்கப்பட்டன. தற்போது இந்தியா வென்றுள்ளது.
‘சத்யமேவ ஜெயதே’ என்ற கூற்றுக்கு ஏற்ப, தர்மம், உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பது நிச்சயமாகி உள்ளது.

ஒற்றுமையின் சின்னம்

இதற்காக எத்தனை துறவியர், வி.எச்.பி., யின் அசோக் சிங்கால் உள்ளிட்ட தலைவர்கள், லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், பக்தர்கள் போராடிஉள்ளனர். சரியான பாதையில், உண்மை மற்றும் நீதியின் மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது.இனி, கோவில் கட்டுமானப் பணி வேகமாக நடைபெறும். மிக விரைவில் ராமருக்கான கோவில் தயாராகும். இந்தக் கோவில், சனாதன தர்மத்தின் ஒரு அடையாளமாக, நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் விளங்கும்; நம் நாட்டின் ஒற்றுமையின் சின்னமா
கவும் இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், இந்தக் கோவில் பயன்பாட்டுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி பணி நடைபெற்று வருவதாக, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

*ராமர் கோயில் வழிபாடு எப்போது

கோயில் கட்டுமான அளவு: 84,000 சதுரடி
பரப்பளவு: 120 ஏக்கர்

3 தளம் 3

தரை தளத்தில் குழந்தை ராமர் சிலை வைக்கப்படும். முதல் தளத்தில் ராமர் சீதா, லட்சுமணன், அனுமன் அடங்கிய ராமர் தர்பார் அமைக்கப்படும்.

நீளம் : கிழக்கு – மேற்காக 380 அடி
அகலம் : வடக்கு – தெற்காக 250 அடி
உயரம் : கருவறை தரையில் இருந்து கோபுரத்தின் உயரம் 181 அடி

*மூன்று நிலை

கோயில் கீழ் தளத்தில் கருவறை கட்டுமானப்பணி 2023 டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும். 2024க்குள் கோயில் கட்டுமானம், 2025 டிசம்பருக்குள் முழு வளாக பணியும் நிறைவடையும்.

*ராஜஸ்தான் 4 லட்சம் கன அடி பிங்க் நிற கற்கள்

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து கோயில் கட்டுவதற்கான கிரானைட் கற்கள் கொண்டு வரப்படுகின்றன.

2020 ஆக. 5ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

*செலவு

கோயில் கட்டுமான செலவு ரூ. 300 கோடி. சுற்றியுள்ள 20 ஏக்கரை மேம்படுத்தும் பணி சேர்த்து மொத்தம் ரூ. 1000 கோடி.

இரும்பு பயன்படுத்தப்பட மாட்டாது. கர்நாடகா, ஆந்திராவிலிருந்து கோயில் கட்டுவதற்கான கிரானைட் கற்கள் கொண்டுவரப்படுகின்றன. கோயில் வளாகத்தில் தியான அறை, கண்காட்சி அறை, ஆராய்ச்சி மையம், தங்கும் விடுதி, உணவு விடுதி போன்றவை அமைகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.