புதுடெல்லி : உலகளவில் அதிகமாக கோதுமையை விளைவிக்கும் உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 3 மாதங்களாக போர் நடந்து வருவதால், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது உணவு பொருட்களின் கையிருப்பு அதிகமாக இருக்கிறது. உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இதை அனுப்ப தயாராக இருப்பதாக சமீபத்தில் கூட ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் கோதுமையின் விலை உயர்ந்து வருவதால், அதன் விலையை கட்டுப்படுத்துவதற்காக அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் தடை விதித்தது. அதே நேரம், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுக்கு தொடர்ந்து கோதுமையை அனுப்பி வருகிறது.அதன்படி, துருக்கி நாட்டுக்கும் இந்திய கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், இந்த கோதுமையை ஏற்க துருக்கி அரசு மறுத்துள்ளது. இந்த கோதுமையில் பைட்டோசானிட்டரி இருப்பதாகவும், ரூபெல்லா வைரஸ் தொற்று இருப்பதாகவும் அந்த நாடு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதன் காரணமாக, இந்தியா அனுப்பிய கோதுமையை மீண்டும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
