தேயிலை தோட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் உள்ளூர், வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், மேற்குவங்காளத்தை சேர்ந்த தம்பதி தங்கள் 15 வயது மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவுக்கு வந்துள்ளனர். அந்த தம்பதி இடுக்கி மாவட்டம் சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பருடன் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அந்த சிறுமியின் நண்பனும் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் தான். அவர் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

தேயிலை தோட்டத்தில் இருந்து சிறுமியும் அவரது நண்பரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் சிறுமியின் நண்பரை கடுமையாக தாக்கினர்.

பின்னர் அந்த சிறுமியை தேயிலை தோட்டத்தில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் ஆண் நண்பன் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிசென்றது அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, தப்பியோடிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், 4 பேரில் 2 பேர் சிறுவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.