மனைவியைக் கொன்று சூட்கேஸில் அடைத்த சைக்கோ ஐ.டி.ஊழியர்..! ஆடையின்றி அடித்து உதைத்த கொடுமை..!

விவாகரத்து தரமறுத்து தாய்வீட்டுக்குச் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சைக்கோ குணம் கொண்ட ஐ.டி.ஊழியர் ஒருவர், அந்த பெண்ணைக் கொலை செய்து சூட்கேசில் அடைத்து ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி கோரலகுண்டா பகுதியைச் சேர்ந்த பத்மாவுக்கும், திருப்பதி சத்திய நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் வேணுகோபால் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் பத்மாவை தனியாக வீட்டில் அடைத்து வைத்து கதவைப் பூட்டி விட்டு வெளியே செல்வது, தினமும் இரவில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி அடிப்பது என சைக்கோ போல வேணுகோபால் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் விவாகரத்துப் பெற முடிவு செய்த பத்மாவிடம், பெற்றோர்கள் பலமுறை சமரசம் செய்து கணவருடன் சேர்த்து வாழ வைத்து வந்தனர்.

வேணுகோபாலின் கொடுமைகள் எல்லைமீறிச் செல்லவே, பொறுத்துக் கொள்ள இயலாத பத்மா கடந்த ஆண்டு மீண்டும் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து விவாகரத்துக் கோரி வேணுகோபால் வழக்கு தொடர்ந்த நிலையில், பத்மா விவாகரத்து வழங்க ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி சமாதானம் ஆனது போல நடித்து பத்மாவை வேணுகோபால் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துச் சென்றுள்ளார்.

இதை உண்மை என நம்பி பத்மா மீண்டும் கணவர் வேணுகோபால் வீட்டுக்கு சென்றுள்ளார். பத்மாவின் பெற்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதெல்லாம் மனைவி நலமாக இருப்பதாக கூறி விட்டு, மனைவியை பேச அனுமதிக்காமல் இருந்துள்ளார் வேணுகோபால்.

பத்மாவின் பெற்றோரும் தங்கள் மகள், மருமகனோடு நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று அமைதியாக இருந்துள்ளனர்.

5 மாத காலமாக பத்மாவின் பெற்றோரை நம்ப வைத்த நிலையில் கடந்த 10ஆம் தேதி விவாகரத்து வழக்கு சார்பாக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்த நிலையில் வேணுகோபால் மட்டும் நீதிமன்றத்தில் தனியாக ஆஜராகி உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பத்மாவின் தாயார் கேட்ட போது வேணுகோபால் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளான்.

இதையடுத்து கடந்த 27ஆம் தேதி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தங்கள் மகள் பத்மாவை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வேணுகோபாலிடம் விசாரணை மேற்கொண்டதில் விவாகரத்து தர மறுத்த மனைவியை அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசியது அம்பலமானது.

சமாதானமானது போல் மனைவியை அழைத்து வந்த வேணுகோபால் வீட்டில் அடைத்து வைத்து மனைவி பத்மாவிடம் விவாகரத்து தரக்கோரி வாக்குவாதம் செய்துள்ளான்.

அதற்கு பத்மா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வேணுகோபால், அவனது தந்தை பாண்டு ரங்காச்சாரி தாய் ராணி மற்றும் நண்பர் சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து பத்மாவை அடித்துக் கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து பின்னர் அதனை போர்வையால் கட்டி காரில் எடுத்து சென்று திருப்பதி ரேணிகுண்டா அருகிலுள்ள வெங்கடாபுரம் ஏரியில் வீசி உள்ளனர்.

பின்னர் பெற்றோரை திருப்பதி அருகே காரிலிருந்து இறக்கிவிட்ட வேணுகோபால், தனது நண்பர் சந்தோஷ் உடன் ஐதராபாத்திற்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வேணுகோபாலை அழைத்துச் சென்ற போலீசார் வேணுகோபால் அடையாளம் காட்டிய பகுதியில் நீச்சல் வீரர்கள் உதவியுடன் சடலத்தை தேடிய நிலையில் ஐந்து மாதத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட பத்மாவின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து வேணுகோபால் அவருடைய தந்தை மற்றும் தாய் ஆகியோரைக் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கூட்டாளி சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சைக்கோ மனநிலை கொண்ட மகனின் பேச்சை நம்பி மருமகளை அடித்துக் கொன்றதால் கொலை வழக்கில் சிக்கி சாப்ட்வேர் என்ஜினியர் குடும்பமே கம்பி எண்ணிவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.