ரஷியா தீவிர தாக்குதல்: உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் அமைப்பு விநியோகம்- அமெரிக்க அதிபர் தகவல்

வாஷிங்டன், ஜூன். 1-

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதிகளை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றன.

உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவிகளை அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இதன் மூலம் ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இதனால் தலைநகர் கிவ், கார்கிவ் ஆகிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை.

இதற்கிடையே உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது என்று ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் அமைப்புகள் அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோபைடன் கூறும்போது, “உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளேன். இது போர்க்களத்தில் முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க உதவும் என்றார்.

அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, “அதிநவீன ஏவுகணை அமைப்புகள் உக்ரைனில் ரஷியாவின் முன்னேற்றங்களை தடுக்க பயன்படுத்தப்படும்.

அவை ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது. ரஷியாவுக்குள் தாக்க ஏவுகணைகளை பயன்படுத்த மாட்டோம் என்று உக்ரைன் உறுதி அளித்தையடுத்து 80 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடிய அதிநவீன பீரங்கி ராக்கெட் அமைப்புகளை உக்ரைனுக்கு அமெரிக்க வழங்குகிறது.

இதில் வெடிமருந்துகள், விமான கண்காணிப்பு ரேடார்கள், கவச எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவை களும் அடங்கும் என்றனர்.

இதையும் படியுங்கள்..
குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.