விக்ரம் பார்த்த பிறகு மம்முட்டி சம்மதிப்பார் : கமல் நம்பிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‛விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி பான் இந்தியா ரிலீஸாக வெளியாக இருக்கிறது. இதற்காக கமல் சென்னை, மும்பை, ஐதராபாத், கொச்சி என இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் கேரளாவுக்கு சென்ற கமல் அங்கே மோகன்லால் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த படத்தை புரமோட் செய்தார். மேலும் மற்றொரு புரமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசும்போது மம்முட்டியுடன் தான் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இவ்வளவு நாட்களாக ஏன் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவில்லை என நிருபர்கள் கேட்டபோது, “பலமுறை நானும் மம்முட்டியும் அமர்ந்து பல கதைகளை விவாதிப்போம்.. ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. எனக்கு ஓரளவுக்கு திருப்தி என்றாலும் கூட, கொஞ்சம் பொறுங்கள் நல்ல கதையாக அமையட்டும் நாம் இணைந்து நடிப்போம் என்று மம்முட்டி கூறிவிடுவார். இப்போது இந்த விக்ரம் படம் வெளியாக இருக்கிறது. ஒருவேளை இதைப் பார்த்தபின் மம்முட்டி நிச்சயம் என்னுடன் இணைந்து நடிக்க சம்பாதிப்பார் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் கமல்.

மலையாளத்தில் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் பத்து வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.