“எண்ணும் எழுத்தும்” பயிற்சியை உடனே நிறுத்த வேண்டும்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

சென்னை:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2021-22-ம் கல்வி ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 1.6.2022 மற்றும் 2.6.2022 ஆகிய இரு நாட்கள் “எண்ணும் எழுத்தும்” பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6.6.2022 முதல் 10.6.2022 முடிய “எண்ணும் எழுத்தும்” பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோடை விடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையைத் துய்க்கும் பிரிவினராவர். இதனாலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

எனவே, இக்கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக “எண்ணும் எழுத்தும்” பயிற்சி அமைந்துள்ளது. கோடை விடுமுறையில் இப்பயிற்சி நடத்துவதை எதிர்த்து 28.5.2022 அன்று திருச்சியில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் “எண்ணும் எழுத்தும்” பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.