“பேசாம அரசாங்கத்தை எங்ககிட்ட கொடுத்திடுங்க..!’’ – திருச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

மத்தியில் பா.ஜ.க., தலைமையிலான மோடி அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதையடுத்து மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், பா.ஜ.க.,வினர் தொடர் பிரசார நிகழ்வினை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை நேற்று திருச்சிக்கு வந்தார். காலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தவர், மதியம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஸ்வச் பாரத் மிஷன், அம்ருத் திட்டம், பிஎம் கிசான் திட்டம், சூர்ய மின் உற்பத்தி உயர்வு, ஆதார் ரேஷன் கார்டு இணைப்பால் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளது என மத்திய பா.ஜ.க., அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

அண்ணாமலை

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “தமிழக பா.ஜ.க.,வைப் பொறுத்தவரை காவிரி, மேக்கேதாட்டூ, முல்லை பெரியார் அணை, இந்தி திணிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் தமிழர்களுக்கு எது நல்லதோ, தமிழ்நாட்டு மக்களுக்கு எது சரியானதாக இருக்குமோ அதை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே, `எல்லா தாய் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது எந்த விஷயத்தில் பா.ஜ.க., தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டதென்று தெரியவில்லை. தமிழகத்தில் இரட்டை நிலைப்பாட்டை யார் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். தி.மு.க., முல்லைப் பெரியாரில் கபட நாடகம் ஆடுகிறது. நேத்து கூட, `பா.ஜ.க., சின்ன கட்சி. நாங்க தான் பெரிய கட்சி’ன்னு ஒரு தலைவர் சொல்லியிருக்காரு. 2021-22 உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள், எந்தக்கட்சி தமிழகத்தின் 3-வது கட்சியாக இருக்கிறது என்கின்ற டேட்டாவை எடுத்துப் பார்த்தாலே எல்லாம் தெரியும்.

நான் ட்விட்டரில் பயன்படுத்தியிருக்கக்கூடிய வார்த்தையான ‘பரியா’ என்பது எல்லா டிக்ஸ்னரியிலும் தெளிவாக இருக்கிறது. அது யாரையும் எந்த சமுதாயத்தையும் குறிக்கவில்லை. 2014-க்கு முன்பும் பிறகும் இந்தியா எப்படி இருக்கிறது என்பதற்காக நான் போட்ட வார்த்தை தான் அது. இதை சம்பந்தமேயில்லாத எதோ ஒரு கட்சி, ஒரு சாதியை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக செய்றாங்கன்னா நாம என்ன செய்ய முடியும்” எனக் காட்டமானார்.

தொடர்ந்து பேசியவர், “தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறதென தமிழக முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். நேஷனல் க்ரைம் ரெக்கார் டேட்டாபேஸ் எடுத்து பாருங்க கொடூரக் கொலை, கேங் மர்டர், போதை சம்பந்தமான கேஸ் அதிகமாகியிருக்கா இல்லையான்னு!… முதலமைச்சர் எதுவுமே இல்லைன்னு சொன்னா எதுக்கா கஞ்சா ஆபரேஷன் 2.0 போடணும். சேலத்திலும், சி.எம் ஸ்பெஷல் செல் முன்பும் மண்ணெண்ணெய் ஊத்தி பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்காங்க. வார வாரம் ஏதாவது ஒரு கலெக்டர் ஆபீஸ் முன்னாடி இப்படி ஒரு சம்பவம் நடக்குது. முதலமைச்சர் இதற்கு கவனம் கொடுக்க வேண்டுமோ தவிர, நாங்க ஏதோ கருத்து சொல்றோம்னு அதுக்கு அட்டாக் செய்ய வரக்கூடாது. pfrda-ல் இங்கிருந்து வசூல் செய்யப்பட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு போச்சுன்னே தெரியலை. நம்முடைய நிதியமைச்சர் 10 ஆயிரம் கோடியை எங்க டெப்பாசிட் பண்ணியிருக்கோம்னு சொல்லணும்” என சூடானார்.

அண்ணாமலை

`சசிகலா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது, அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்ற செந்தில் பாலாஜியின் விமர்சனம், தி.மு.க., மீது சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ குறித்து செய்தியாளர்கள் கேள்விகை முன்வைக்க, அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “யார் வேண்டுமானாலும் பா.ஜ.க.,வில் வந்து சேரலாம். ஆனால், குறிப்பிட்ட சிலர் பெயரைச் சொல்லி இவங்க வருவாங்களான்னு கேட்டா, இது ஒரு மனிதன் முடிவெடுக்ககூடியது கிடையாது. சீனியர் லீடர்ஸ் எல்லோரையும் கலந்து ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும். பா.ஜ.க-வில் மாநிலத் தலைவரின் கருத்து என்பது மட்டுமே கட்சியினுடைய கருத்து. நயினார் நாகேந்திரன் சொன்னது முழுக்க அவருடைய தனிப்பட்ட கருத்து அது.

பா.ஜ.க., இன்றைக்கு 8 சதவிகித வாக்கைத் தாண்டி வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால், மக்கள் பா.ஜ.க.,வை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று அர்த்தம். 2024 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.,வுக்கு 25 எம்.பி-க்கள் கிடைக்கத் தான் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். செந்தில் பாலாஜி 5 கட்சி மாறினவர். காற்றிலிருந்து நிலக்கரி வரை விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர். அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். எனக்கு பக்குவமாக ஊழல் பண்ணத் தெரியாது. அந்தவகையில் செந்தில் பாலாஜி சொன்னது சரிதான்.

எங்களுடைய அலுவலகத்திற்கு நேரிலும், தபாலிலும் ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன. எனவே, தி.மு.க., அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இலவச டோல் ஃப்ரீ எண்ணை ஆரம்பிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே சொன்னபடி தி.மு.க., அரசின் 2 துறைகளில் நடந்துள்ள ஊழல்களை ஜூன் 4-ம் தேதிக்குள் அம்பலப்படுத்துவோம். இதை வைத்து அரசு திருந்த வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. மக்கள் ஓட்டு போட்டு ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு வருஷம் ஆச்சு. அரசு தப்பு செய்யும்போது அதை எடுத்துச் சொல்லும் போது அதை கரெக்‌ட் செய்ய வேண்டும். திரும்பத் திரும்ப அதே தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு புதிய கல்விக் கொள்கையைப் பற்றி என்ன புரிஞ்சிருக்குன்னு எனக்குத் தெரியலை. அவர் மேடையில் பேசும் எல்லா பேச்சுகளும் புதிய கல்விக் கொள்கைகளைச் சார்ந்து தான் இருக்கிறது. அமைச்சர் பொன்முடி அவர்கள் புதிய கல்விக் கொள்கையை படிச்சிருக்காரா?… அவருடைய புரிதல் என்னவென்றே தெரியவில்லை” என்றவரிடம்,

‘தி.மு.க., அமைச்சர்களின் ஊழல் பட்டியலைப் போல, முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களையும் வெளியிடுவீர்களா?’ என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “பேசாம கவர்மெண்ட்டை எங்ககிட்ட கொடுத்துடுங்க. நாங்களே பண்றோம். கவர்மென்ட்டை எடுத்து நடத்த பி.ஜே.பி., தயாராக இருக்கு. இந்த ஊழல் பட்டியல் முன்னாள் அமைச்சர்களுக்கு பொருந்துமான்னு கேட்டா, சர்க்காரியா கமிஷன்ல இருந்து ஆரம்பிக்கிறோம். எல்லா ஊழல்களையும் ஓப்பன் பண்றோம். இப்போ எதிர்க்கட்சியாக எந்தெந்த ஊழல்கள் எல்லாம் எங்களுடைய கவனத்திற்கு வருகிறதோ அதைத்தான் ஆராய்ந்து மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.