மணிரத்னம் பிறந்த நாளிலும் வராத 'பொன்னியின் செல்வன்' அப்டேட்
தமிழில் தயாராகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இப்படம் ஆரம்பமான நாளிலிருந்து படப்பிடிப்பு முடிந்த நாள் வரை மீடியாக்களில் எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. இதுவரையிலும் ஓரிரு முறை மட்டுமே படம் பற்றிய அப்டேட்களைக் கொடுத்துள்ளார்கள். முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருப்பின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட படத்தின் பிரமோஷனை ஆரம்பிக்கவில்லை என்றால் இந்தப் படம் எப்படி பான்-இந்தியா படமாக வெளிவரும், 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்களின் வசூலை முறியடிக்கும்.
இன்று இப்படத்தின் இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள் என்பதால் படம் பற்றிய அப்டேட் ஏதாவது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், இதுவரையிலும் வராத அப்டேட் இதற்கு மேலும் வருமா என்ற சந்தேகம் வருகிறது. மணிரத்னம் இன்னும் 'ஓல்டு ஸ்கூல் ஆப் பிரமோஷன்'ஐ பாலோ செய்கிறார் எனத் தெரிகிறது.