5 வருடமாக இருட்டில் தவித்து வருகிறேன்: பலாத்கார வழக்கில் நடிகை கண்ணீர் மனு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் கால அவகாசம் கோரி குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது அரசுத் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில்,  ‘‘நடிகை பலாத்கார காட்சிகள் நீதிமன்றத்தில் வைத்து 2 முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. பலாத்கார காட்சிகள் நடிகர் திலீப்பின் கைக்கு சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டியது உள்ளது. எனவே அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் காலஅவகாசம் வேண்டும்’’ என்றார். பின்னர் நடிகர் திலீப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘ஒருநாள் கூட விசாரணையை நீட்டிக்க போலீசுக்கு அனுமதி வழங்கக்கூடாது. 5 மாதங்களுக்கு மேல் விசாரணை நடத்தியும் திலீப்புக்கு எதிராக எந்த ஆவணமும் கிடைக்கவில்லை’’ என்றார்.அதைத் தொடர்ந்து நடிகை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பது: பலாத்கார காட்சிகள் பலரிடம் இருப்பதாக சந்தேகம் உள்ளது. இந்த காட்சிகள் வெளியானால் எனது வாழ்க்கையை அது மிகக் கடுமையாக பாதிக்கும். கடந்த 5 வருடங்களாக நான் இருட்டில் தவித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்களை சமூகம் அங்கீகரிக்காத சூழ்நிலை நிலவி வருகிறது. விசாரணை அதிகாரிகள் சேகரித்த ஆதாரங்களில் யார் முறைகேடு செய்தாலும் அது மிகவும் ஆபத்தாகும். எனவே நீதியை நிலைநாட்டுவதற்காக முறையான விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை வழங்கக் கூடாது. இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், போலீசின் மனு தொடர்பான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.