ஆக்ரா மதரஸாவில் சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்ஸோ வழக்கு பதிவு; மவுலானா தலைமறைவு

புதுடெல்லி: ஆக்ராவின் மதரஸாவில் தங்கிப் பயின்றுவந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மவுலானா மீது புகார் எழுந்துள்ளது. அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவான நிலையில் சம்பந்தப்பட்ட அந்த மவுலானா தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆக்ராவில் செயல்படும் பெண்களுக்கான மதரஸாவில் 30 மாணவிகள் தங்கிப் பயில்கின்றனர். இதன் பொறுப்பாளரான மவுலானா தனது மூன்று மனைவிகளுடன் மதரஸாவின் விடுதியிலேயே தங்கி உள்ளார்.

மால்புரா காவல்நிலையப் பகுதியிலுள்ள இந்த மதரஸாவில் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியும் பயில்கிறார். நேற்று காலை இவர் தன் பெற்றோருடன் ஆக்ரா மாவட்ட எஸ்எஸ்பி எஸ்.கே.சிங்கிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

இதை விசாரித்த எஸ்எஸ்பி ஏ.கே.சிங், மதரஸா மவுலானா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை ஆக்ராவின் பொதுநல அமைப்பாளரான குழந்தைகள் உரிமை காப்பாளர் நரேஷ் பராஸ் அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமி புகார் தராதபடி மிரட்டியதாக மவுலானாவின் தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளன. இந்த புகார் உ.பி. மாநில குழந்தைகள் மனித உரிமை ஆணையத்திடமும் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நரேஷ் பராஸ் கூறும்போது, “புகார் கொடுத்துள்ள சிறுமியைத் தவிர அதே மதரஸாவைச் சேர்ந்த மேலும் 3 சிறுமிகள் மவுலானாவால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதையும் போலீஸாரிடம் விசாரிக்கக் கோரியுள்ளோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மதரஸாக்களில் அவ்வப்போது சோதனை செய்து விசாரிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.