ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு – 200 பெண் தொழிலாளர்களுக்கு தலைவலி, கண் எரிச்சல்

அமராவதி:
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட போரஸ் என்ற ரசாயன ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகே பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகத்தில் சீட்ஸ் அப்பேரல் இந்தியா என்ற மற்றொரு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதில், 1,800 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போரஸ் ஆய்வகத்தில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவு அருகிலுள்ள நிறுவனத்திற்கும் பரவியுள்ளது. இதில், சீட்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்த 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அச்சுதாபுரம் பகுதியில் உள்ள 2 மருத்துவமனைகள் மற்றும் என்.டி.ஆர். மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனே அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணிகள் நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அதிகாரிகளிடம் கூறியதுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.