உலக கோப்பை கால்பந்து: தகுதி சுற்றில் உக்ரைன் அணி அபார வெற்றி

கிளாஸ்கோ,

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கு 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகளை தேர்வு செய்வதற்கான இறுதிகட்ட தகுதி சுற்று இப்போது தொடங்கியுள்ளது.

இதில் நேற்று முன்தினம் இரவு கிளாஸ்கோவில் நடந்த பிளே-ஆப் சுற்றில் உக்ரைன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை சாய்த்தது. ஆன்ட்ரி யார்மோலென்கோ, ரோமன் யரெம்சுக், ஆர்டெம் டோவ்பைக் ஆகியோர் உக்ரைன் அணியில் கோல் போட்டனர். இந்த போட்டி கடந்த மார்ச்சில் நடக்க இருந்தது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டு உள்ளது.

உக்ரைன் அடுத்து கார்டிப் நகரில் வருகிற 5-ந்தேதி வேல்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

மற்ற இரு இடங்களுக்கான போட்டியில் ஒரு இடத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, பெரு ஆகிய அணிகளும், இன்னொரு இடத்துக்கு கோஸ்டாரிக்கா, நியூசிலாந்து அணிகளும் உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.