
இரண்டு விருதுகளை தட்டித்தூக்கிய பாக்கியலெட்சுமி சீரியல்!
தொலைக்காட்சி கலைஞர்களுக்கு அந்தந்த சேனல்களே விருது நிகழ்ச்சிகள் நடத்தி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதேசமயம் இன்றைய காலக்கட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு இணையாக சீரியல் கலைஞர்களும் புகழ் அடைந்து வருவதால் பல்வேறு மீடியாக்களும் சின்னத்திரை நடிகர்களை குறி வைத்து விருது நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், ரெட் ஃப்ரேம் மீடியாவும் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது நிகழ்ச்சியை ரெட் ப்ரேம்ஸ் அவார்ட்ஸ் என்ற பெயரில் அன்மையில் நடத்தியது.
ஜீ தமிழ், கலர்ஸ், விஜய் டிவி என பல முன்னணியில் இருக்கும் டிவி தொடர்களில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகள் வாரியாக விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதில், விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி தொடருக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. பாக்கியலெட்சுமி தொடரின் கதாநாயகி சுஜித்ரா சிறந்த அம்மா கதாபாத்திரத்திற்கான விருதையும், மற்றொரு நாயகியான ரேஷ்மா பசுபுலேட்டி சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றுள்ளனர். பாக்கியலெட்சுமி தொடர் ஏற்கனவே விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ள நிலையில், அந்த லிஸ்ட்டில் தற்போது மேலும் இரண்டு விருதுகள் சேர்ந்துள்ளன. இதனையடுத்து நடிகைகள் சுஜித்ராவுக்கும், ரேஷ்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.