சிக்கபல்லாபூர் : காதல் திருமணம் செய்த இளம்பெண் கணவன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வலது காது முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.சிக்கபல்லாபூரின் பாகேபள்ளி அருகே உள்ள ஆச்சேபள்ளி கிராமத்தை சேர்ந்த கொண்டப்பா, 50, – அருணா, 45 தம்பதியின் மகள் அனுஷா, 20. இவருக்கும் சிக்கபல்லாபூர் அருகே உள்ள கரிகானபாளையாவை சேர்ந்த அபிலாஷ், 27 என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஒரு ஆண்டுக்கு முன் இருவரும் ஊரை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் சிக்கபல்லாபூரின் 7வது வார்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று கணவன் வீட்டில் அனுஷா துாக்கிட்ட நிலையில் காணப்பட்டார். அவரது வலது பக்க காது முழுவதும் துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த காது எங்கே என தெரியவில்லை. இதனால் கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தன் மகளை கணவன் அடித்து கொன்று விட்டார் என சிக்கபல்லாபூர் போலீசில் பெற்றோர் புகார் செய்துள்ளனர். கணவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.கைதான அபிலாஷ், கல் குவாரியில் பணிபுரிந்து வருகிறார். தான் லாரி வாங்க வேண்டும் என மனைவியிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டு வந்தார்.இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதுபோல நேற்று முன்தினம் நடந்த சண்டையில் மகளை கொன்றுள்ளார் என அனுஷாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.
Advertisement