இறுகும் பிடி: நுபுர் சர்மாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். “எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது” என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பாஜக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மா, ஜூன் 22ஆம் தேதி ஆஜராக மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முன்னதாக, முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. அதேபோல், பாஜக நிர்வாகிகளின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.