எங்களுக்கும் எகிறி அடிக்கத் தெரியும்: மதுரை ஆதீனத்திற்கு சேகர்பாபு எச்சரிக்கை

Minister P. K. Sekar Babu Tamil News: விசுவ ஹிந்து பரிஷத் (VHP) யின் அறவழி காட்டும் ஆன்றோர்கள் பேரவை சார்பாக மதுரையில் துறவியர் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளான ஞாயிறு மாலை மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில், துறவியர், ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர்.

அப்போது பேசிய மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள், “ஆதினங்கள் அரசியல் பேசலாமா? என கேட்கின்றனர். நான் பேசாமல் யார் பேசுவார்கள்? ஆனால் , அரசியல் வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? இலங்கையில் ராஜபக்சே, கோவிலை இடித்தான் கெட்டான். அது போல் இங்கும் கோவிலை இடித்தவர்கள் கெட்டார்கள். எஸ்ரா சற்குணம், மேடையில் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசுகிறார். அதை கேட்டு, முதல்வர் ஸ்டாலின் முகத்தில் புன்னகை பூக்கிறார்.

திராவிடபாரம்பரியம் என கூறுகிறார்கள். ஆனால் விபூதி பூச மறுக்கிறார்கள். விபூதியை கீழே கொட்டுகிறார்கள். நடராஜ சாமி, முருகன் உள்ளிட்ட சாமிகளை கேவலமாக பேசுகின்றனர். நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த படத்தை பார்காதீர்கள். பேச்சாளர் சாலமன் பாப்பையாவை பல்லக்கில் வைத்து தூக்குகின்றனர். ஆனால் தருமை ஆதினத்தில் பல்லக்கு தூக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

திருமூலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என கூறியதை, அண்ணாதுரை எடுத்து பேசினார். ஆன்மீக வாசகங்களை திருடி அரசியல் பேசியவர்கள், இன்று திராவிடம் என பேசுகின்றனர். அறநிலையத்துறை அறம் இல்லாமல் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட்டு, கோவில் நிர்வாகத்தை நீதிபதிகள், அடங்கிய குழுவிடம் ஒப்படைங்கள்.

மதுரை எம்.பி., வெங்கடேசன், ஆதினங்கள் எல்லாம் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும் என கூறி உள்ளார். எம்.பி அவர்களே, என்னிடம் ஒரு வாரம் வந்து தங்கி பாருங்கள். எனது பணிகள், பூஜை முறை, எனது உணவு முறையை பாருங்கள், சுருண்டு போவீர்கள் என்று கூறினார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரை ஆதீனம் பேச்சிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் சேகர் பாபுவிடம், மதுரை ஆதீனம் கோயில்களில்அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? என்று கேள்வியெழுப்பியுள்ளார் அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, “மாண்புமிகு முதல்வரின் வழிகாட்டுதலின் படி நான் மிகவும் அடக்கி வாசித்து கொண்டிருக்கின்றோம். நாங்களும் எவ்வி அடிக்க முடியும். அது நன்றாக இருக்காது என்பதற்காகத் தான் சற்று பின்னால் வருகிறோம்.

மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஒரு தத்துவத்தை சொல்லி இருக்கின்றார். அதிக தூரம் ஓடுவது எதற்காக என்றால், குறிப்பிட்ட உயரத்தை தாண்டுவதற்காகத் தான் என்று… அதனால் அவர் எங்கள் பதுங்களை பயமாகக் கருதக்கூடாது. எங்களுக்கும் பாயாத் தெரியும்.

மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல்வாதியைப்போல் பேசிக்கொண்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. அதேபோல், ஆதீனங்களை பொறுத்தளாவில் ஒரு இணக்கமான சூழ்நிலையோடு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அவர்களுடைய உரிமையில் தலையிடக்கூடாது என்று எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.

அந்த வகையில் தான், கடந்த 4ம் தேதி கூட நம்முடைய தருமபுரி ஆதீனம் அவர்கள் கட்டி முடித்திருக்கின்ற 24 அறைகளை எங்களை வைத்து திறந்து வைத்தார்கள். அதோடு அவர் நடத்துகின்ற பாடசாலை, அவர் மேம்படுத்தியுள்ள கோசலை, அவர் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களையெல்லாம் ஆய்வு செய்து, அவரோடு காலை சிற்றுண்டியை பகிர்ந்துகொண்டு வந்திருக்கின்றோம்.

ஆகவே, ஆதீனங்கள் யாரும் எங்களுடன் ஆதரவாக இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் முயற்சிக்கின்றார்கள். ஆதீனங்கள் என்பவர்கள் சைவத்தை சார்ந்தவர்கள். சைவம் என்றாலே தமிழ். தமிழை வளர்க்கக்கூடிய, தமிழை முன்னெடுக்கக்கூடிய ஆட்சி முதல்வரின் ஆட்சி.

மதுரை ஆதீனம் ஒரு அரசியல்வாதியாக மாறிவிட்டதால் தான் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றார். அரசியல் என்பது அனைவருடைய எண்ணங்களிலும், அவர் அவர்கள் விரும்பும் கட்சிக்கு சாதகமாக நிலைப்பாட்டில் தான் இருப்பார்கள். ஆகவே அரசியல்வாதிகள் என்பவர்கள் தான் ஒரு ஆட்சியை உருவாக்குகிறார்கள். ஒரு ஆட்சியின் பொறுப்பில் வருகிறார்கள். ஆகவே நாங்கள் தலையிடக்கூடாது என்று சொல்லுகின்ற உரிமை அவருக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.