கன்னியாகுமரி: அயன் பாக்ஸால் தலையில் அடித்து தாய், மகள் கொலை – மர்ம நபர்களைத் தேடும் போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். மீன்பிடித் தொழிலாளியான இவருக்கு பவுலின் மேரி(48) என்ற மனைவியும், அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உள்ளனர். ஆன்றோ சகாயராஜ், அவர் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இளைய மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். ஆண்கள் யாரும் உடன் இல்லாததால் சகாயராஜின் மனைவி பவுலின்மேரி அவர் தாயார் திரேசம்மாள் உடன் முட்டம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்துவந்தார். ஆள் அரவமற்ற பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அவர்கள் வசித்த பங்களா அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு திரேசம்மாள், பவுலின் மேரி ஆகியோர் உறவினர் ஒருவரிடம் செல்போனில் பேசி விட்டுத் தூங்கச் சென்றதாகத் தெரிகிறது. இன்று காலை உறவினர்கள் பவுலின் மேரியை செல்போனில் தொடர்பு கொண்டபோது பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

திரேசம்மாள், பவுலின் மேரி

இதையடுத்து உறவினர்கள் இன்று மதியம் நேரடியாக பவுலின் மேரி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில் ஆள் அரவமின்றி காணப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு பவுலின் மேரியும், அவர் தாய் திரேசம்மாளும் வீட்டின் நடு தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வெள்ளிச்சந்தை போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

வெள்ளிச்சந்தை போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார், குமரி எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம், “அந்த பங்களா வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் முதலில் வீட்டுக்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்துவிட்டு, வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை

வீட்டிலிருந்த அயன் பாக்ஸால் தாய், மகளைத் தலையில் கடுமையாகத் தாக்கி கொலைசெய்து விட்டு, பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11-சவரன் தாலி சங்கிலி, தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5-சவரன் தங்கச் சங்கிலி என 16-சவரன் தங்க நகைகளையும் எடுத்துவிட்டு மீண்டும் வெளியே சென்று கதவைப் பூட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். அதே சமயம் தாய், மகளின் கையில் கிடந்த மோதிரத்தையோ, கம்மல்களையோ திருடவில்லை. வீட்டிலிருந்த பீரோக்களையும் உடைத்து நகைகளைக் கொள்ளையடிக்கவும் முயற்சி செய்யவில்லை. பீரோவில் 70-சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் இருப்பதாகத் தெரிகிறது. எனவே நகைக்காகக் கொலை நடைபெற்றதா, வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம்” என்கிறார்கள்.

கொலையாளிகளைப் பிடிக்க குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் மேற்பார்வையில் 5-தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளன. தனியாகப் பங்களாவில் வசித்த தாய் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.