கேகே.மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை: அவசர வழக்காக ஏற்றது நீதிமன்றம்

இசை ரசிகர்களால் கேகே என்று செல்லமாக அழைக்கப்பட்ட கிருஷ்ண குமார் கடந்த மாதம் 31ம் தேதி கோல்கட்டாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. மறைவு குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கறிஞர் ரவிசங்கர் சட்டோபாத்யாய் என்பவர் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கே.கே கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 2 நாட்கள் அங்கு தங்கி இருந்துள்ளார். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கச்சேரி முடித்து வெளியேறிய வீடியோக்களில் கேகேவுக்கு அதிக அளவிலான வியர்வை வெளியேறுவதும், அவர் சோர்வுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனால் இதுதொடர்பான உண்மை நிலவரம் அறிந்து உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில் அவரது மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை நேற்று பரிசீலனை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா இதனைஅவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.