சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட செலிவியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் செவிலியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒன்று கூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசு நடத்தக் கூடிய தேர்வில் வெற்றி பெற்றும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, எங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும். காவல் துறையினர் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.